உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி: 26-ல் எழுத்துத் தேர்வு
By karpi at February 13, 2012 | 9:57 am | Print
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிகளுக்கான போட்டி எழுத்துத் தேர்வு பிப்ரவரி 26-ல் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
போட்டித் தேர்வு எழுத தகுதியுடைய 66,957 விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கு பிப்ரவரி 20-ம் தேதிக்குள் ஹால் டிக்கெட் அனுப்பிவைக்கப்படும்.
தமிழகம் முழுவதும் 34 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு சுமார் 68,500 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன. பரிசீலனையில் சுமார் 1,500 பேர் எழுத்துத் தேர்வு எழுதுவதற்கான தகுதியைப் பெறவில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து, 66,957 பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அந்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பிப்ரவரி 19-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் தேர்வு, 7 நாள்கள் தள்ளி பிப்ரவரி 26-ல் நடைபெற உள்ளது.

